தேனியில் வெளுத்து வாங்கிய கனமழையால் ரயில்வே சுரங்கப் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக ஏத்தகோவில் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பகுதியில் மழைநீர் குளம் போல தேங்கியது. இதனால் அவ்வழியே மிகுந்த சிரமத்துடன் வாகன ஓட்டிகள் பயணம் செய்தனர். எனவே, அப்பகுதியில் மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தேனி அருகே கொடுவிலார்பட்டி பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் அரசு பள்ளியின் உள்ளே இருந்த மரம் முறிந்து விழுந்தது. தொடர்ந்து சாலையில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்ததில் மின்சார துண்டிப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், பழனி மலைக்கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் தண்ணீர் கொட்டியது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பலத்த சூறைக்காற்றுயுடன் கூடிய கனமழையால் சாய்ந்து விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் அகற்றினர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது.
கல்லிடைக்குறிச்சி குமாரகோவில் தெற்கு ரத வீதியில் உள்ள பழமையான வேப்பமரம் வேரோடு சாய்ந்து அப்பகுதியில் செல்லும் மின் வயர் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றி மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
















