மேற்குவங்கத்தின் முதல் பாஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றுக் கொண்டார். இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இதன்மூலம் 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில், புதிய அரசு பதவியேற்பு விழா கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழா மேடைக்கு திறந்த வாகனத்தில் அணிவகுத்து வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து முழக்கங்களுடன் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு, விழா மேடையில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, பாஜகவின் மிக மூத்த தொண்டர்களில் ஒருவரான 98 வயதாகும் மக்னலால் சர்க்காரை பிரதமர் மோடி ஆரத்தழுவி, காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இதையடுத்து மேற்குவங்கத்தின் முதல் பாஜக முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து, பா.ஜ.க மூத்த தலைவர்கள் திலிப் கோஷ், அக்னி மித்ரா பால், அசோக் கிர்தானியா, சுதிராம் டூடு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்வராக பதவியேற்ற சுவேந்து அதிகாரி மற்றும் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பாஜகவுக்கு இமாலய வெற்றி அளித்த மேற்குவங்க மக்களுக்கு பிரதமர் மோடி விழா மேடையிலேயே சாஷ்டாங்கமாக விழுந்து நன்றி தெரிவித்துக்கொண்டார்.
















