நீட் வினாத்தாள் கசிவு புகார் தொடர்பாக இருவரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இளநிலை மருத்து படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்தநிலையில், ராஜஸ்தான் மாநிலம் சீகர் பகுதியில் நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஒரு வினாத்தாள் 28 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் மொத்தமாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தேசிய தேர்வு முகமைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்வதாகவும், மறு தேர்வு தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மத்திய உயர்கல்வித்துறை அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையல், விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
















