அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை அவர்களது பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை செல்லாது என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆர், ஜெயலலிதாவால் கட்டி எழுப்பப்பட்ட அதிமுக என்ற எஃகு கோட்டை சிலரின் தனிப்பட்ட சுய லாபத்திற்காக அசைத்து பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை ஆராய அவசர பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும், முக்கியமாக திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியதால் பொதுச்செயலாளருடன் கருத்து வேறுபாடு தொடங்கியதாகவும் கூறியுள்ளனர்.
தம்மிடம் 17 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறி தற்காலிக சபாநாயகரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மனு அளித்தன் விளைவாக பிளவு ஏற்பட்டது எனக்கூறியுள்ள அவர்கள், 30 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தரப்பு ஆதரவுக் கடிதத்தை தற்காலிக சபாநாயகரிடம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
கருத்து வேறுபாட்டுக்கு அச்சாரம் போட்டது எடப்பாடி பழனிசாமி என்றும், கட்சிக்காக அரும்பாடுப்பட்ட 28 பேரை ஒரே கையெழுத்தில் நீக்கி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை செல்லாது எனவும் கூறியுள்ளனர்.
தேர்தல் ஆணைய சட்டப்படியும், நீதிமன்ற சட்டப்படியும் அசாதாரண சூழலில் ஒருவரை நீக்கவோ அல்லது சேர்க்கவோ இரு பிரிவினருக்கும் அதிகாரம்
கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 28 பேரும் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளனர்.
இதனிடையே, எக்ஸ் பக்கத்தில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் உண்மையை அறியாமல் அறிக்கை வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை எனக்கூறியுள்ள அவர், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் இபிஎஸ் தன்னிச்சையாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தோல்வி வந்த பிறகு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மக்கள் ஆதரவு பெற்ற தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு ஆதரவை வழங்கியதாக கூறியுள்ள அவர்,
யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கட்சியை பிரிக்கும் எண்ணமோ யாருக்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அழைத்தால் பேச தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார். தோல்விக்கான காரணங்களை அனைவரும் சேர்ந்து ஆராய்வோம் என்றும், அதிமுகவின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம் எனவும் கூறியுள்ளார்.
















