அதிமுகவின் இரு அணிகளும், தங்கள் எண்ணிக்கையின் பலத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் பேரத்தை உயர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை தவெக அரசு நிரூபித்தாலும், எந்த நேரத்தில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற வாய்ப்பு உள்ளது. அதனால் தான், அதிமுகவில் இருந்து முன்கூட்டியே தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளது.
அதற்கு பிரதிபலனாக, அமைச்சர், வாரிய தலைவர் பதவிகளை தர தவெக ஒப்புக் கொண்டுள்ள நிலையில், முன்னணியில் உள்ள மாஜிக்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும் என்பதால், வேலுமணி தரப்பில் இருக்கும் 12 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாக அக்கட்சி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
12 எம்எல்ஏக்களையும் இழுக்க எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாகவும், எம்எல்ஏக்களின் கடனுக்கு தாம் பொறுப்பு என இபிஎஸ் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆட்சியில் பங்கு கிடைச்சா மத்தவங்களுக்கு கடன் கொடுக்கும் இடத்துக்கு போயிடலாம் என்றும், பொறுமையா இருக்குமாறு வேலுமணி தரப்பு பேசி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இரு தரப்பும் தங்களின் பலத்தை தக்க வைக்க, வேறு வழியின்றி எம்எல்ஏக்களிடம் பேசி வருவதாக அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















