கேரளாவின் முதலமைச்சராக வி.டி. சதீசனை காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்திருப்பது காங்கிரஸ் தலைமை குடும்பத்தில் உள்ள மும்முனை போட்டியில் ராகுல் காந்தியின் தோல்வியை எடுத்துக் காட்டுவதாக கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நடந்த முடிந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 தொகுதிகளில் வெற்றிப் பெற்று 10 ஆண்டு கால கம்னியூஸ்ட் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
காங்கிரஸ் 63 இடங்களிலும், கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 22 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆனாலும் கட்சியின் முதல்வர் தேர்வுக்காக 10 நாட்கள் செலவழித்த காங்கிரஸ், இறுதியாக முன்னாள் எதிர்கட்சித் தலைவர் வி.டி. சதீசனை மாநிலத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தது.
கேரளாவில் ஆட்சியை அமைந்திருந்தாலும் முதல்வர் தேர்வில் நடந்த விவாதங்கள் அக்கட்சியின் தலைமை குடும்பத்தின் உள் அரசியலை அம்பலப் படுத்தியுள்ளது.
வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே கேரளாவின் முதல்வர் பதவிக்கான போட்டியில் காங்கிரஸ் கட்சியில் கேசி வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா மற்றும் வி.டி. சதீசன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
அந்தந்த தலைவர்களின் ஆதரவாளர்கள் சோசியல் மீடியாவில் ஆக்ரோஷமான பொதுப் பிரச்சாரம் செய்து தலைமைக்கு பெரும் நிர்பந்தத்தை ஏற்படுத்தி வந்தனர். மேலும் பேரணிகள் நடத்தியும் காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
முதலமைச்சர் பதவி தொடர்பாக நிலவும் தகராறு குறித்த செய்திகள் உண்மையாக இருந்தால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி, கூட்டணியின் ஒற்றுமையைச் சேதப்படுத்தும் என்று எச்சரித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் பி.எம்.ஏ. சலாம், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காங்கிரஸ் மேலிடம் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே இதுபோன்ற நடவடிக்கைகள் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குகின்றன என்றும் அவர் கூறினார்.
இதில் ராகுல் காந்தி, வேணுகோபாலின் பக்கம் என்றால் பிரியங்கா காந்தி சதீசனை ஆதரித்தார். சோனியா காந்தி சென்னிதலாவுக்கு ஆதரவாக இருந்தார்.
வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் 63 பேரில் 47 பேர் கேசி வேணுகோபாலுக்கு ஆதரவாக இருந்ததால் அவரே முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மூத்தத் தலைவர் என்பதால் ரமேஷ் சென்னி தலா முதல்வர் ஆகலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் சதீசன் முதல்வர் ஆவார் என்று பெரும்பாலான காங்கிரஸ் கட்சியினரே எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அமைப்புப் பொதுச் செயலாளர் என்ற முறையில், வேட்பாளர் தேர்வுப் பங்கீட்டில் ஆதிக்கம் செலுத்திய வேணுகோபால், ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து வந்த போதிலும் முதல்வராக முடியவில்லை.
இது சதீசனின் வெற்றி என்பதை விடவும், கேசி வேணுகோபாலின் தோல்வி என்பதை விட ராகுல் காந்தியின் தோல்வி என்றே பார்க்கப் படுகிறது.
தமது விருப்பத்தை விட்டுவிட்டு யாருக்கோ அடிபணிந்த நிலையில் முதல்வர் பதவி போட்டியில் இருந்து கேசி வேணுகோபாலை, ராகுல் காந்தியே விலக வைத்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவராக, கடந்த ஐந்து ஆண்டுகளாக பினராயி விஜயன் அரசைத் தாக்கி, எல்.டி.எஃப்-க்கு எதிரான பிரச்சாரத்தைத் தீவிரமாக்கிய சதீசனுக்கு கேரள மக்களின் ஆதரவும் இருந்தது. கூட்டணிக் கட்சிகளும் தொண்டர்களும் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிக்கு சதீசனின் உழைப்பே காரணம் என்று ஒன்றாகக் கூறினார்கள். குறிப்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சதீசனையே முதல்வராக்க வேண்டும் என்று கூறியது.
மேலும், வயநாடு மற்றும் கோழிக்கோட்டில், வேணுகோபாலைத் திணிப்பதற்கு எதிராக ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியை எச்சரிக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இது வெறும் உட்கட்சித் தலைமைப் போட்டியாக மட்டும் இல்லாமல் காங்கிரஸ் மேலிடம் கேரளாவின் குரலைக் கேட்கத் தயாராக இருக்கிறதா? இல்லையா என்பதற்கான ஒரு பரீட்சையாக அமைந்தது. சதீசனை முதல்வராக்கியதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஒரு அடிப்படை உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் கமல் நாத் முதலமைச்சரானபோது, திக்விஜய் சிங்குக்கு அதில் பங்கு இருந்ததாகக் கருதப்பட்டது. ராஜஸ்தானில் அசோக் கெலாட் முன்னிலை பெற்றபோது, அகமது பட்டேலின் செல்வாக்கு முக்கியத்துவம் பெற்றது. சத்தீஸ்கரில், இரண்டரை ஆண்டுகளாக நீடிக்கும் எனக் கூறப்படும் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்திற்கு பூபேஷ் பாகேல் இணங்க மறுத்துவிட்டார். கர்நாடகாவில், தலைமை மாற்றம் குறித்த தொடர்ச்சியான அழுத்தங்களை சித்தராமையா தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.
அந்தப் பின்னணியில், கேரளா தனித்து நிற்கிறது. இங்கே, டெல்லியை எதிர்த்தது ஒரு மாநில செல்வாக்கு மிக்க தலைவர் அல்ல; மாறாக, கட்சியில் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகக் கருதப்படும் ராகுல் காந்தியின் ஆதரவு பெற்ற வேணுகோபாலே தான் விரும்பிய பதவியைப் பெறத் தவறியதுதான் குறிப்பிடத் தக்கது.
இன்னொரு புறம் காங்கிரஸ் கட்சியில் குடும்ப அதிகாரப் போட்டியில், பிரியங்காவே வெற்றி பெற்றுள்ளார். ராகுலை விட மாநில மக்களின் மனநிலையை நன்கு புரிந்துகொள்பவராக பிரியங்கா உள்ளார் என்று காங்கிரஸ் தலைவர்கள் பார்க்கத் தொடங்கினால், ராகுலின் தலைமைக்கே ஆபத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
நீண்ட காலமாகவே ராகுலுடனான தனது நெருக்கத்தின் காரணமாக, தனது அதிகாரப்பூர்வப் பதவிக்கு மீறிய செல்வாக்கைச் செலுத்தும் வேணுகோபாலுக்கு கட்சித் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்பட்டாலும் அதுவும் சாத்தியமில்லை என்று தெரிய வருகிறது.
மல்லிகார்ஜுன் கார்கே பதவியில் உறுதியாக இருப்பதாலும், அமைப்புத் தேர்தல்கள் அக்டோபர் வரை நடைபெறாததாலும், வேணுகோபால் அமைப்பு ரீதியாக பதவி பெறுவதும் சிரமமாகிறது.
இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ராகுல் காந்தியிடம் தெரிவித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வார்டு நிலை முதல் கட்சியின் உயர்மட்டம் வரை சென்னிதலாவுக்குத் துணையாக நின்றவர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யத் தயாராகி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
உண்மையில் கேரளாவில் சதீசன் முதலமைச்சராக உருவெடுத்தார். கார்கே தோற்கவில்லை. பிரியங்கா ஆதாயம் அடைந்தார். வேணுகோபால் கட்டுப்படுத்தப்பட்டார். ஆனால் ராகுல் காந்தி தான் தோல்வியடைந்துள்ளார்
















