கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட 19 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ங
கரூரில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளை டெல்லிக்கு வரவழைத்தும் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் தமிழக சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக விஜய் கடந்த 10-ந் தேதி பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
இந்நிலையில் கரூர் துயர சம்பவத்தின்போது பணியில் இருந்த காவல்துறையினர் 19 பேர் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் மணிவண்ணன், தனிப்பிரிவு காவலர்கள் ராஜாமணி, ராமலிங்கம், மோகன்ராஜ், கதிர்வேல் உள்ளிட்ட 19 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குநரகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
















