தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக முதலமைச்சர் விஜய் அளித்த புகாரில் பதிவான வழக்குகளில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ்க்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு பெண் தொண்டர்கள் அதிகமானோர் ஆதரவளித்தது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜ், தவெக பெண் தொண்டர்கள் குறித்து இழிவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய், டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தார். அதேபோல, தொடர்ந்து, கடலூர் மாவட்ட தவெக செயலாளரும், அமைச்சருமான ராஜ்குமார், கடலூர் புது நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார்களின் அடிப்படையில், பொன்ராஜ்-க்கு எதிராக சென்னை சைபர் குற்றப்பிரிவிலும், கடலூர் புது நகர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனையடுத்து, இந்த வழக்குகளில் முன் ஜாமின் கோரி பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இது குறித்த விசாரணையில், இரு வழக்குகளிலும் பொன்ராஜுக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும்,
சென்னை சைபர் கிரைம் பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
















