பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகாக மாவட்ட வாரியாக 11 குழுக்களை அமைத்து கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் வரும் 29ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகள் கூட்டம் நடத்தவும், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
மொத்தம் 11 குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழவிலும் 3 முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மாநிலச் செயலாளர் மீனாட்சி, செய்தித் தொடர்பாளர் கார்வேந்தன் ஆகியோர் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மத்திய அமைச்சர் எல்.முருகன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் தலைமையிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தமிழக பாஜகவில் அடுத்தகட்ட மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















