எரிபொருள் சிக்கனம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன், சென்னை விமான நிலையத்தில் இருந்து அரும்பாக்கம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர், அங்கிருந்து நேரடியாக விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று பொதுமக்களுடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். மெட்ரோ பயணத்தின் போது மத்திய அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர்,பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதார நலன் மற்றும் எரிபொருள் சேமிப்பை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தனியார் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து, பேருந்து, மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.
அதன்படி பொதுப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துரைக்கும் வகையில் தாம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
















