நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மூன்று வயது குழந்தை மற்றும் அமானி கிராம பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு இருவேறு நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதில் தொடர்புடைய நபர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் நிலையத்தையே பூட்டும் நிலை போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளிபாளையம்- சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நாமக்கல் எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட வரதராஜன் மற்றும் மணி ஆகியோருக்கு 15 நாளில் தகுந்த தண்டனை வாங்கித் தருவதாக உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
















