தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் எதிரொலியாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பழனி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, பாலசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
கொடைக்கானல் நகரின் முக்கிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. நட்சத்திர ஏரி, நாயுடுபுரம், அட்டுவம்பட்டி போன்ற பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை எதிரொலியாக சாலைகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியுற்றனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் எதிரொலியாக கழிவு நீர் வாய்க்கால் நிரம்பி சாலைகளில் மழைநீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அவதியுற்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. பெத்தநாயக்கன்பாளையம், ஓலப்பாடி, கொட்டவாடி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.
















