மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் என முதலமைச்சரின் தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரங்கள் நடும் விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.அருள்பிரகாசம், முதலமைச்சர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஷோபா சந்திரசேகர், கடந்த 25 ஆண்டுகளாக ஈசா மூலம் யோகா பயின்று வருவதாக கூறினார். மரங்களை அழிக்க நமக்கு உரிமை கிடையாது எனக்கூறிய அவர், மனம் கஷ்டமாக இருக்கும்போது மரத்தை கட்டி அணைத்தால் புது உற்சாகம் தரும் என தெரிவித்தார். மேலும், மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு இந்த மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் என குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தமிழகத்திற்கு தலைமகனை தந்துள்ள ஷோபா சந்திரசேகர் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி என கூறினார். மத்திய, மாநில அரசு எடுக்கும் திட்டங்களுக்கு ஈசா யோகா போன்ற அமைப்பு அக்கறையாக செயல்படுவதை வரவேற்கிறேன் என தெரிவித்தார்.
தவெக ஆட்சியில் விதிகளை மீறி செயல்பட்ட பல்வேறு கல்குவாரிகள் மூடப்பட்டு மணல் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
2031ஆம் ஆண்டுக்குள் காடுகளின் நிலப்பரப்பை 33 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும், கூவம், அடையாறு ஆற்றை மீட்டு எடுக்கவும், காற்று மாசை தடுக்கவும் முதலமைச்சர் திட்டங்களை தீட்டி வருவதாக ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
















