தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் இரண்டு மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்தடை அமல்படுத்தப்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் சராசரி மின் தேவை 16ஆயிரம் மெகா வாட்டாக இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 29-ம் தேதி 21 ஆயிரத்து 307 மெகா வாட்டாக அதிகரித்தது.
ஜூன் மாதத்திலும் வெயிலின் தாக்கம் குறையாததால், வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது.
மின் தேவையை ஈடுசெய்யும் அளவுக்குப் போதிய மின்சாரம் கிடைக்காததால் பல மாவட்டங்களில், இரண்டு மணி நேரம் வரை மின் தடை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், இரவில் ஏற்படும் மின் தடையால் மக்கள் வீடுகளில் துாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, கூறிய தமிழக நுாற்பாலை சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாச்சலம், தமிழகத்தில் தொடர்ந்து, 15 நாட்களுக்கு மேலாக அறிவிக்கப்படாத மின் தடை, ஒவ்வொரு பகுதியாக அமல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
அதிகபட்சமாக இரண்டு மணி நேரமும், குறைந்தபட்சமாக ஒரு மணி நேரமும் மின் தடை அமல்படுத்தப்படுவதாகவும்,இதற்கு, மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் இல்லை என்பதே காரணம் எனவும் தெரிவித்தார்.
பூந்தமல்லியில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு எதிரொலியாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர்.
பூவிருந்தவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் தொடர்ந்து அறிவிக்கப்படாமல் மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், கோடை காலம் என்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து புகார் தெரிவிக்க மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால் ஊழியர்கள் அழைப்பை ஏற்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் ஆத்திரமடைந்து நள்ளிரவில் மின்வாரிய அலுவலத்திற்கு சென்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர் மின்வெட்டை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















