வீடுகளில் பயன்படுத்தப்படும் 14 புள்ளி 2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை 29 அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சமையல் எரிவாயு, வணிக சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.
தமிழகத்தில், இம்மாதம் ஒன்றாம் தேதி, வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படாமல், 928 ரூபாய் 50காசுகளாக இருந்தது. வணிக எரிவாயு சிலிண்டர் விலை, 46 ரூபாய் உயர்ந்து, மூன்றாயிரத்து 237 ரூபாயில் இருந்து, மூன்றாயிரத்து 283 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் நாடு முழுவதும் 14 புள்ளி 2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை 29 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 928 ரூபாய் 50 காசுகளாக இருந்த சிலிண்டர் விலை 957 ரூபாய் 50 காசுகளாக அதிகரித்துள்ளது. அதேபோல் டெல்லியில் 942 ரூபாயாகவும், மும்பையில் 941 ரூபாய் 50காசுகளாகவும், கொல்கத்தாவில் 968 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
















