லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்காத இஸ்ரேல், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாவின் கோட்டையாக கருத்தப்பட்ட தாஹியே மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு குடியிருப்பு கட்டடம் சேதமடைந்த நிலையில், 2 பேர் உயிரிழந்தனர். பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதனை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கருதி நேரடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
இந்நிலையில் தற்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் கோபம் கொண்ட ஈரான், அந்நாட்டின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல பகுதிகளில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன.
ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அச்சுறுத்தலை இடைமறித்துத் தடுப்பதற்கான பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் IDF அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தாக்குதலால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
















