பலுசிஸ்தான் விடுதலைப் படையை ஐ.நா. பயங்கரவாத அமைப்பின் கீழ் பட்டியலிடும் முயற்சிக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது… இது பாகிஸ்தான், சீனாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில், இதற்கான காரணம் என்ன? என்பதை ஆராயலாம் இந்த செய்தித்தொகுப்பில்…
பாகிஸ்தானுக்கு பெரும் குடைச்சலை கொடுத்து தலைவலியை ஏற்படுத்துவது பலுசிஸ்தான் விடுதலை ராணுவமும், மஜீத் படைப்பிரிவும்தான்… அந்த அமைப்புகளை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது பாகிஸ்தான்…
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து அந்த அமைப்புகளுக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியது…. அதன்படி பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், மஜீத் படைப்பிரிவு ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் சபையின் 1267 பயங்கரவாத தடைகள் என்ற விதிமுறைகளின் கீழ் பட்டியலிட பாகிஸ்தானும், சீனாவும் கூட்டு முன்மொழிவை முன்வைத்தன.
ஆனால், அந்த முன்மொழிவை தொடக்க நிலையிலேயே தடுத்து நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா… பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தை ஐ.நா.அமைப்பின் கீழ் பட்டியலிட அமெரிக்கா தடை விதித்தது… இது பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, ஐ.நா. 1267 தடைகள் கட்டமைப்பின் கீழ் சேர்க்க இரண்டு பலூச் குழுக்களுக்கும்,அல் கொய்தா அல்லது ISIL உடன் தொடர்புபடுத்துவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது.
வாசிங்டனின் இந்த முடிவு, ஒரு முக்கியமான அரசியல் செய்தியாகவும் பார்க்கப்படுகிறது, ஏனெனில் இது பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது..
பலூச் அமைப்புகளை ஐ.நா.வின் 1267 விதிமுறையின் கீழ், அல் கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எல். உடன் இணைத்து தடை விதிக்க பாகிஸ்தான் முற்பட்டதற்கான காரணம் ஒன்றுதான்… இந்தியாவை பயங்கரவாதத்தின் ஆதரவாளராக சித்தரிக்க, பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீரின் முயற்சிகளில் ஒரு அங்கமாக இருந்தது…
இதற்கு முன்பு பலூச் குழுக்களை பாகிஸ்தானுக்குள் ஃபித்னா-அல்-ஹிந்துஸ்தான் என்று விவரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம், லஷ்கர்-இ-தொய்பாவுடன் (LeT) தொடர்புடைய எதிர்ப்பு முன்னணியை (TRF) அமெரிக்கா ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்த பிறகு, பாகிஸ்தான் டிரம்ப் நிர்வாகத்துடனான தனது மேம்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்தி, 2 பலூச் அமைப்புகளுக்கு எதிராகவும் அதேபோன்ற நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்திருந்தது.
லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களைப் பட்டியலிடுவதற்கான இந்தியா-அமெரிக்காவின் கூட்டு முயற்சிகளை சீனா பல முறை தடுத்திருக்கிறது. சீனாவின் ஆட்சேபனைகள் காரணமாக, தற்போதும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த சாஜித் மிர், ஷாஹித் மெஹ்மூத் மற்றும் தல்ஹா சயீத் ஆகியோர் பயங்கரவாத தடை பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
ஆபரேஷன் சிந்துரின்போது பஹாவல்பூரில் இந்தியா நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அப்துல் ரவுஃப் அஸ்கர், 2023ம் ஆண்டில் இந்தியா-அமெரிக்கா இணைந்து முன்வைத்த ஒரு கூட்டுத் திட்டத்திற்கும் உட்பட்டிருந்தார்; அத்திட்டத்தை சீனா ஒரு தொழில்நுட்பத் தடையின் மூலம் தடுத்தது குறிப்பிடத்தக்கது.
எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, ஐ.நா. பாதுகாப்பு சபையில் அந்த முன்மொழிவுக்கு தொழில்நுட்பத் தடை விதிக்குமாறு பிரான்சின் ஆதரவுடன் இந்தியா, அமெரிக்காவை இணங்க வைத்தது.
பிரான்ஸ், பிரிட்டன் நாடுகள் அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் நிலையில், சீனாவுடனான நெருங்கிய உறவுகள் காரணமாக ரஷ்யா இந்த செயல்பாட்டின்போது மௌனம் காத்தது. பாகிஸ்தானின் முன்மொழிவு முடக்கப்பட்ட நிலையில், பலூச் அமைப்புகளை, ஐ.நா. பயங்கரவாத தடை பட்டியலில் சேர்ப்பதற்கான பிற வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது.
.
















