ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியதற்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
தெலங்கானாவில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக சிறப்பு அதிரடி படை உருவாக்கப்பட்டது. இதற்கு, ஹைட்ரா என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பெயர் சூட்டினார்.
இதுகுறித்து பேசிய அவர், ஹைட்ரா என்பது சர்வாதிகாரி ஹிட்லருக்கு விருப்பமான வார்த்தை எனவும் அவரிடம் இருந்து உத்வேகம் பெற்றே நீர்நிலைகளை பாதுகாக்கும் படைக்கு அப்பெயரை வைத்ததாகவும் தெரிவித்தார்.
பிறரை கொலை செய்யும் ஹிட்லருக்கு நெருக்கமான குழு ஹைட்ரா என அழைக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்தார். ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, ஹிட்லரின் அபாயகரமான மற்றும் அவசரகால மனநிலையை ரேவந்த் ரெட்டி வெளிப்படுத்தி, ராகுலின் கருத்தை எதிரொலித்துள்ளதாக விமர்சித்தார்.
எமர்ஜென்சி காலம் முதல் மக்களின் குரலை காங்கிரஸ் ஒடுக்கி வந்துள்ளதாகவும், ரேவந்த் ரெட்டியின் கருத்துக்கு மக்களிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
















