பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உள்ள இந்தியா, ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையோ அல்லது வெளிநாட்டுத் தாக்குதல்களையோ எதிர்கொண்டால், இந்தியாவின் பின்னால் அமெரிக்கா உறுதியாக நிற்கும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் பகுதியாக, பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான முக்கிய இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது. இதில், வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
அப்போது இந்திய-அமெரிக்க பாதுகாப்பு உறவுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதிபர் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே தற்போது முறையான பாதுகாப்பு ஒப்பந்தம் ஏதும் இல்லை என்றாலும், இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நாங்கள் உதவ அங்கிருப்போம் என்று பிரதமர் மோடியின் கரங்களைப் பற்றி உறுதியளித்தார்.
எதிர்காலத்தில் தாம் கண்டிப்பாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். மேலும், பிரதமர் மோடி ஒரு தேவதூதர் போல காட்சியளிக்கிறார் என்றும், ஆனால் மிகக் கடுமையானவர் என்றும் மோடியின் பேச்சுவார்த்தை திறமையை நகைச்சுவையாக பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், பிப்ரவரி மாதமே இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டாலும், அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கைகள் மற்றும் சில நுணுக்கமான விவரங்களால் அது இன்னும் கையெழுத்தாகாமல் உள்ளது என்றும், எனினும், இரு நாடுகளும் மிக விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய நெருங்கிவிட்டதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
















