முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை தாமதப்படுவது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
2023-ம் ஆண்டு கரூரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து, அவர்களை தவறான வார்த்தைகளால் திட்டியதாக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி அசோக்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனபால், மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
கொலை வழக்குகளில்கூட மறுநாளே பதில் மனு தாக்கல் செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இந்த வழக்கில் தொடர்ந்து அவகாசம் கோரப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
















