திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 18 இடங்களில் அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலும், திருவண்ணாமலை தென்மாத்தூர் பகுதியில் உள்ள வீடு மற்றும் அருணை கல்லூரி வளாகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, கல்லூரி வளாகத்திற்குள் வெளிநபர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கரூரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. அரசு ஒப்பந்ததாரரும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பருமான சங்கர் ஆனந்த் இல்லத்தில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஒருவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சத்யா நகரைச் சேர்ந்த ராஜசேகரனின் மகன் கண்ணன், மதுரை நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில், அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு மீது கமிஷன் மற்றும் பணி நியமன முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பழனி நகர் பகுதியில் ஓய்வுபெற்ற கோட்டப் பொறியாளர் சத்தியபாமாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி. தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் பணியில் இருந்தபோது, கரூரில் சாலை அமைப்பதற்கான நில அளவீட்டு பணிகளில் சுமார் 3 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சத்தியபாமா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், முறைகேடாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
















