பொது இடங்களில் பசுக்கள் அல்லது கன்றுக்குட்டிகளை வதைக்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
பசுவதை தொடர்பாக, இந்து மக்கள் கட்சி நிர்வாகி சூர்ய பிரசாந்த், கடந்த மே 27-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டோ அல்லது பிற நாட்களிலோ தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுக்குட்டிகளை வதைக்கக் கூடாது என உத்தரவிட்டது.
தற்காலிக கொட்டகைகளை அமைத்து, பொது இடங்களை வதைக் கூடங்களாக அறிவிக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்த நீதிமன்றம்,
விலங்குகளை வதைக்க வேண்டுமெனில், உரிய உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மேலும், பக்ரீத் பண்டிகையின்போது பசுக்களை மட்டுமின்றி, பிற விலங்குகளையும் பலியிடலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறும் தமிழக தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
















