தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசியதாக கைதான 3 பேரையும் ஜூலை 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக வெளியான குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான யூடியூபர் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகியோரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது எனவும் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால் விசாரணை பாதிக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், கைதானவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, பணத்தை இதுவரை யாருக்கும் வழங்கவில்லை எனவும் இந்த கைது சட்டவிரோதமானது எனவும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.கார்த்திகேயன், கைதான மூவரையும் ஜூலை 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
















