தமிழகத்தில் ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரும் டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த பார்கள் தொடர்ந்து இயங்கி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 4,765 டாஸ்மாக் கடைகள் இருந்தாலும், அரசு அங்கீகாரத்தோடு சுமார் 2,400 பார்கள் செயல்பட்டு வந்தன. இந்த பார்களுக்கான தற்காலிக ஒப்பந்த நீட்டிப்பு காலம் ஜூன் 30-ம் தேதியுடன் முழுமையாக காலாவதியானது.
புதிய டெண்டர் நடைமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படாததால், பார்களின் உரிமக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து டாஸ்மாக் நிர்வாகம் தற்காலிக உத்தரவு பிறப்பித்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் புதிய டெண்டர்கள் கோரப்பட்டு அவை இறுதி செய்யப்படும் வரை, டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து இயங்கும் பார்களை மூட டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டது.
இருப்பினும் அதனை கடைபிடிக்காமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் தொடர்ந்து இயங்கின.
அந்த வகையில் மதுரை, கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் தொடர்ந்து இயங்கின. இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என பார் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
















