திருப்பூரில் ஏழு மூட்டை கடிதங்களை வழங்காமல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தபால்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளக்கோவில் தபால் நிலையத்தில் தபால்காரராக பணியாற்றும் செந்தில்குமார் என்பவர், அரசு அலுவலகங்களுக்கு வழங்க வேண்டிய தபால்கள் மற்றும் பொதுமக்களுக்கு வந்த கடிதங்களை 7 மூட்டைகளில் வீட்டில் பதுக்கி வைத்தது கண்டறியப்பட்டது. தபால்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் கோட்ட தலைமை தபால் கண்காணிப்பாளர் பட்டாபிராமன் உத்தரவிட்டுள்ளார்.
செந்தில்குமாருக்கு ஆறு மாதங்களாக உடல்நலம் சரியில்லை என்று தெரியவந்துள்ளது. இதனிடையே, டெலிவரி செய்யப்படாமல் உள்ள தபால்களை உரியவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தபால்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
















