தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், காவலர்கள் உட்பட 600 பேருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய், பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காவலர் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பட்டு வேட்டி சட்டையுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். பின்னர், திறந்த ஜீப்பில் சென்று காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். கடலோர காவல்படை, சிங்கப்பெண் அதிரடிப்படையினர் கம்பீரமாக அணிவகுத்துச் சென்றனர்.
காவல்துறையில் சிறந்து விளங்கிய 600 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் மற்றும் முதலமைச்சர் பதக்கங்களை, முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கி கவுரவித்தார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு காவல்துறை மோப்பநாய் ராக்கி பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்ததுடன், பயிற்சியாளர்களின் உத்தரவிற்கு ஏற்ப சாகசங்களை செய்து அசத்தியது.
இந்நிகழ்வில் காவல்துறையினர் ரோந்து பணிக்காக புதிய வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 96 ஹோண்டா யுனிகார்ன் மற்றும் 42 மகேந்திரா தார் ராக்ஸ் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.
தொடர்ந்து, பயங்கரவாதிகளிடம் இருந்து பணய கைதிகளை மீட்பது தொடர்பான ஒத்திகை நடைபெற்றது. மோப்ப நாய்களுடன் இணைந்து அதிதீவிர படையினர் தத்ரூபமாக நடித்து காட்டினர்.
இதைத்தொடர்ந்து போலீசாரின் பைக் சாகசங்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரமிப்புடன் கண்டு வியந்தார்
நிகழ்ச்சியின் நிறைவாக, பதக்கம் வென்றவர்களுடன் முதலமைச்சர் விஜய் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். விழாவில் கலந்துகொண்டபின் சாலையில் நடந்து சென்ற முதலமைச்சர் விஜய், அங்கிருந்த மக்களை பார்த்து கையசைத்தார்.
















