காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையால் 5 மணி நேரத்திற்கும் மேலாக நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை சீரான முறையில் மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை. 5 மணி நேரமாக மின்தடை ஏற்பட்டதால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன.
சில நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும், மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாததால் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். உயர் மின்னழுத்தம் காரணமாக ஏற்பட்ட பழுதே மின்தடைக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதனிடையே ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், ரிட்டன் சப்ளை பிரச்னையால் சிறிது நேரம் ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
















