கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் வாரிசுதாரர்களுக்கு அரசு பணி ஆணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்க்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் 31 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டது. இதற்கான பணி ஆணையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பணியாணை வழங்குவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிதிமன்றம் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு அரசு பணியாணை வழங்கிய அரசாணையை ரத்து செய்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் பாதிக்கப்பட்ட பிரபாகரன் செல்வகுமார், ஆனந்த ஜோதி, பிரபாகரன் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த மனுவானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தமிழக அரசின் கொள்கை முடிவின் அடிப்படையிலே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணை வழங்கப்பட்டது என்றும், அரசின் கொள்கை முடிவில் உயர்நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையே இல்லாத நிலையில் அதனை எவ்வாறு ரத்து செய்ய முடியும்? என் கேள்விகளை எழுப்பினர்.
அப்போது எதிர்மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அரசு வேலைகள் எவ்வாறு வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டி உள்ளது என்ற வாதத்தை முன் வைத்தனர்.
அப்போது நீதிபதிகள் கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிலர் உயிரிழந்து விட்டனர். அது துரதிஷ்டவசமான சம்பவம். அப்படி இருக்கையில் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு நபருக்கு அரசு வேலை வழங்குகிறது என்ற பட்சத்தில், வேலை வழங்கக் கூடாது என கூறுவதற்கு நீங்கள் யார்? என கேள்வி எழுப்பினர்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வேலை பார்க்கும் நபராக இருக்கலாம் அவர்தான் குடும்பத்தை வழி நடத்துபவராக இருக்கலாம் அவ்வாறான ஒருவர் இதுபோன்று நெரிசலில் சிக்கி உயிரிழந்திருந்தால் அவருக்கு வேலை வழங்கக் கூடாது என்று கூறுகிறீர்களா? என கேள்விகளை கேட்டதோடு, இந்த விவகாரத்தில் தயவு செய்து நீங்கள் அரசியலை புகுத்த வேண்டாம் என நீதிபதிகள் எதிர்மனுதாரர்களிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நீதிபதிகள் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய அரசாணை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு, வழக்கில் சம்பந்தப்பட்ட எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.
















