பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள அய்யனார் கோயிலில் தேர் கொண்டு வரும் பணியின்போது 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நன்னை கிராமத்தில் அமைந்துள்ள ஏரிக்கரை அய்யனார் கோயிலில் ஆடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. குறிப்பிட்ட சமூகத்தினருக்கு குலதெய்வமாக கூறப்படும் இந்த கோயிலில் 20 அடி உயரம் உள்ள சகடை தேர் இழுக்கும் நிகழ்வு நடத்தப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு தேரில் அலங்காரம் செய்வதற்காக தனிக்கட்டிடத்தில் இருந்து சன்னதி முன்பாக கொண்டு வரும் பணி நடைபெற்றது. அப்போது தேரின் கோபுர பகுதி மின்கம்பி மீது பட்டு மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் அண்ணாதுரை மற்றும் பரமசிவம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த ராசு என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















