டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தம்முடைய பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் பின்னணியை விளக்கும் செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்…
டாடா குழுமம் இந்தியாவின் மிகவும் பழமையான மற்றும் மிகப்பெரிய பன்னாட்டு வணிகக் குழுமங்களில் ஒன்றாகும்.
இதன் தாய் நிறுவனமான டாடா சன்ஸ், டாடா குழுமத்தில் உள்ள பல்வேறு முக்கிய நிறுவனங்களின் பங்குகளை நிர்வகித்து வருகிறது. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், 1987-ஆம் ஆண்டு பொறியாளராக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். தம்முடைய அயராத உழைப்பால் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றார்.
சிறந்த நிர்வாகத்தின் காரணமாக டாடா குழும நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தன. இதையடுத்து, 2022-ஆம் ஆண்டு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிக்கப்பட்டது. இரண்டாவது பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதியுடன் நிறைவடையும் சூழலில், சந்திரசேகரனின் பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க டாடா அறக்கட்டளை பரிந்துரைத்தது.
ஆனால் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற்ற டாடா சன்ஸ் இயக்குநர் குழு கூட்டத்தில் ஒரு உறுப்பினர் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், சந்திரசேகரன் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஆனால், அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை அப்பதவியில் நீடிப்பார். டாடா அறக்கட்டளைகள் தலைவர் நோயல் டாடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், புதிய தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவருக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை நடப்பாண்டில் 22 ஆயிரத்து 238 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன.
விமானங்களை நவீனமயமாக்குவது, விஸ்தாரா நிறுவனத்துடன் இணைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றாலும், விமானப் போக்குவரத்தில் லாபத்தை ஈட்ட பல ஆண்டுகளாகும் என கணிக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனம், தற்போது AI யுகத்தின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது.
ஆன்லைன் வர்த்தகத் துறையில் கடுமையான போட்டி நிலவும் சூழலில், பிக்பேஸ்கெட் மற்றும் டாடா நியூ(Tata Neu) தளம் தொடர் இழப்புகளைச் சந்தித்து வருவது டாடா சன்ஸ் குழுமத்திற்கு மிகப்பெரிய சவாலை உருவாக்கியுள்ளது. அதேபோல், சொகுசு கார் தயாரிப்பில் ஜாகுவார் நிறுவனம் தற்போது மின்சார வாகனங்களுக்கு மாறுவது, சீன சந்தையில் கடும் போட்டியை எதிர்கொள்வது போன்ற சவால்களை எதிர்நோக்கியுள்ளது.
இந்தியாவில் சிப் தயாரிப்பு மற்றும் மின்னணு உற்பத்தித் துறையில் டாடா சன்ஸ் செய்துள்ள பலகோடி ரூபாய் முதலீடுகள், நீண்ட காலத்திற்குப் பிறகே பலனளிக்கும். மற்ற நிறுவனங்களின் இழப்புகளுக்கு மத்தியில் இதை சமாளிப்பது புதிய தலைவருக்கு மிகப்பெரிய சோதனையாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, டாடா அறக்கட்டளைகள் மற்றும் டாடா குழுமம் நிர்வாகத்திற்கு இடையே நல்லுறவைப் பேணுவதும் டாடா சன்ஸ் புதிய தலைவரின் மிக முக்கியமான நிர்வாகப் பணியாக இருக்கும்.
இந்த சூழலில், டாடா சன்ஸ் குழுமத்தில் நிலவும் தற்போதைய சவால்களை சமாளித்து, டாடா நிறுவனங்களை லாபகரமானதாக மாற்றும் திறன் கொண்ட புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
















