தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் (AI 2379) திடீரென நடுவானில் குலுங்கி 300 அடி சரிந்த விவகாரத்தில் காக்பிட் பராமரிப்புப் பதிவில் குறுகிய கால இடைவெளியில் மூன்று ஹைட்ராலிக் கோளாறு இருந்தது தெரியவந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி, மூன்று பச்சிளம் குழந்தைகள் உட்பட 137 பயணிகள் மற்றும் எட்டு விமானப் பணியாளர்களுடன் தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI-2379 திடீரென 300 அடி சரிந்தது. இந்த சம்பவத்தில் 20 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளர்கள் காயமடைந்தனர்.
எதிர்பாராதவிதமாக கடுமையான காற்றுச் சுழலில் விமானம் சிக்கியதாக விமான நிறுவனம் தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது.
‘ஃப்ளைட் ரடார் 24’ தரவுகளின்படி, விமானம் திடீரென ஏற்பட்ட கீழ்நோக்கிய காற்றழுத்தம் காரணமாக 300 அடி உயரம் வரை கீழே இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லிக்கு AI2379 விமானத்தை இயக்கிய ஏர்பஸ் A320 ரக விமானத்தின் பராமரிப்பு அறிக்கையில் இரண்டு முதல் மூன்று நிமிட இடைவெளியில் 11 அமைப்பு சார்ந்த எச்சரிக்கைகள் பதிவாகியுள்ளன என தெரியவந்துள்ளது.
விமானத்தின் பச்சை (green), மஞ்சள் (yellow) மற்றும் நீல (blue) நிற ஹைட்ராலிக் அமைப்புகளில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, சுமார் ஒரு நிமிடத்திற்குள் மூன்று ஹைட்ராலிக் குறைந்த அழுத்த எச்சரிக்கைகள் பதிவாகியுள்ளது. அந்த மூன்று ஹைட்ராலிக் எச்சரிக்கைகள் வந்த சிறிது நேரத்திலேயே ஆட்டோபைலட் செயலிழந்ததும் பதிவாகியுள்ளது.
ஹைட்ராலிக் எச்சரிக்கைகளுக்கும், ஆட்டோபைலட் செயலிழப்புக்கும், பின்னர் விமானத்தில் ஏற்பட்ட குலுக்கல் மற்றும் உயர மாற்றத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதைத் தீர்மானிக்க, இந்த நிகழ்வுகளின் வரிசைமுறை குறித்து புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விமானத்தின் அவசரக்கால வெளியேறும் கதவுகள் மற்றும் பிற அமைப்புகள் தொடர்பான எச்சரிக்கைகளும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக டெல்லியில் விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக, GMT நேரம் 5:22-க்கு பராமரிப்புப் பதிவில் ஆட்டோபைலட் செயலிழந்ததற்கான (off) இரண்டாவது பதிவும் அறிக்கையில் காணப்படுகிறது.
விமானப் பயணத்தின் போது ஆரம்பத்தில் ஆட்டோபைலட் செயலிழந்த பிறகு, ஒரு கட்டத்தில் அது மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாகவும், பின்னர் தரையிறங்குவதற்கு முன் மீண்டும் அணைக்கப்பட்டதாகவும் பதிவு சுட்டிக்காட்டியுள்ளது.
பல எச்சரிக்கைகள் வந்தபோதிலும், ஆரம்பக்கட்ட ஹைட்ராலிக் எச்சரிக்கைகளுக்குப் பிறகும் சுமார் 1 மணிநேரம் 20 நிமிடங்கள் தொடர்ந்து வானில் பறந்த விமானம் பின்னர் டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.
விமானப் பயணத்திற்குப் பிந்தைய பராமரிப்பு அறிக்கை, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் விமான விபத்து விசாரணைப் பிரிவு (AAIB) ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விமானத் தரவுகள், விமான அமைப்புகள், செயல்பாட்டுப் பதிவுகள், பராமரிப்புப் பதிவுகள், மருத்துவத் தகவல்கள் மற்றும் இச்சம்பவம் தொடர்பான பிற ஆதாரங்களை விமான விபத்து விசாரணை அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.
சர்வதேச விமான விபத்து விசாரணை நெறிமுறைகளின்படி, பிரான்ஸின் விமான விபத்து விசாரணை அமைப்பான BEA மற்றும் ஏர்பஸ் (Airbus) நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரதிநிதிகள் ஆகியோர் AAIB-க்கு உதவி வருகின்றனர்.
தொழில்நுட்பம், செயல்பாட்டு நடைமுறைகள், மருத்துவம் மற்றும் மனிதக் காரணிகள் (human-factors) தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்த பிறகு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஆரம்பக்கட்ட முடிவுகள் வெளியிடப்படும் என்று விமான விபத்து விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக விமானத்தை இயக்கிய முதன்மை விமானிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதை அடுத்து, விசாரணை முடியும் வரை இரு விமானிகளும் விமானப் பணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
















