வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான தாரிக் ரஹ்மான், தற்போது லண்டனிலிருந்து நாடு திரும்பியுள்ளார். தொண்டர்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது வருகையின் முக்கியத்துவம் குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவராக இருந்து வருபவர் தாரிக் ரஹ்மான். கடந்த 17 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்த இவர், தற்போது மீண்டும் நாடு திரும்பியுள்ளார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள பிரதமர் தேர்தலில் தாரிக் ரஹ்மான் வெற்றிப்பெற அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவரது வருகை அந்நாட்டு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரான ஜியாவுர் ரஹ்மானின் மகன்தான், தாரிக் ரஹ்மான். ஜியாவுர் ரஹ்மான் 1981ம் ஆண்டுப் படுகொலை செய்யப்படவே, அவர் மனைவியான கலீதா ஜியா தீவிர அரசியலில் ஈடுபடத்தொடங்கினார். 1991ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்று வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், 2001ல் நடந்த தேர்தலிலும் வெற்றிப்பெற்றார்.
இந்தச் சூழலில், கடந்த 2007ம் ஆண்டு ராணுவத்தின் ஆதரவு பெற்ற இடைக்கால அரசு வங்கதேசத்தில் ஆட்சி அமைத்தது. அப்போது கலீதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். அத்துடன் 18 மாதங்கள் அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். 2008ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்படவே, அவர் உடனடியாகத் தனது குடும்பத்துடன் லண்டன் சென்று விட்டார். கடந்த 17 ஆண்டுகளாக அவர் வங்கதேசத்திற்கு ஒருமுறை கூட வரவேயில்லை.
இதனிடையே, முகமது யூனுஸ் தலைமையிலான அரசு கலீதா ஜியா மற்றும் தாரிக் ரஹ்மானை அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவித்தது. இதனையடுத்து, லண்டனில் இருந்து தாரிக் ரஹ்மான் தற்போது வங்கதேசம் திரும்பினார். தலைநகர் டாக்கா வந்தடைந்ததும், காலணிகளை அகற்றிவிட்டு வெறுங்காலில் நின்று தாய்நாட்டை வணங்கினார். பின்னர், ஒரு கைப்பிடி மண்ணை கையில் எடுத்துவைத்துக்கொண்டார்.
அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆடம்பரமான நாற்காலியைத் தவிர்த்துவிட்டு, சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தார். தாரிக் ரஹ்மானின் இந்தச் செயல்பாடுகள் அனைத்தும், அவரது கட்சியினர் மற்றும் வங்கதேச மக்களிடையே நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளன. லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், மார்டின் லூதர் கிங்கின் i Have A Dream என்ற புகழ்ப்பெற்ற வரியை மேற்கோள்காட்டி பேசினார்.
தனக்கு ஒரு கனவு உள்ளதாகவும், மக்கள் அனைவரும் விரும்பும் பாதுகாப்பான நாடாக வங்கதேசத்தை மாற்றுவதுதான் அந்தக் கனவு எனவும் குறிப்பிட்டார். வங்கதேசம் என்பது இஸ்லாமியர்கள், இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மக்களுக்குமான நாடு எனத் தெரிவித்த அவர், நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கூறினார். வங்கதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திபு சந்திர தாஸ், அம்ரித் மொண்டல் என்ற 2 இந்துக்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அந்நாட்டில் நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 342 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்தும் பேசிய தாரிக் ரஹ்மான், குழந்தைகளாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், எந்த வயது, எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் தேசமாக வங்கதேசத்தை மாற்ற விரும்புவதாக கூறினார்.
அத்துடன், வங்கதேசத்தின் வெளியுறவு கொள்கைகளையும் அவர் விமர்சித்துப் பேசினார். குறிப்பாக, முகமது யூனுஸ் அரசு இந்தியாவிடம் மோதல்போக்கும், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நெருங்கி உறவும் கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தாரிக் ரஹ்மான், “வங்கதேசம்தான் நமக்கு முக்கியம்.
மாறாக, டெல்லியோ, பாகிஸ்தானோ அல்ல” எனவும் குறிப்பிட்டார். அத்துடன், இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற அமைப்புகளையும் அவர் கடுமையாக விமர்சித்தார். வங்கதேச தேசியவாத கட்சி தொடக்கம் முதலே இந்தியாவுடன் நல்லுறவை கொண்டுள்ளது.
பிரதமர் மோடி வங்கதேசத்திற்கு சென்றிருந்தபோது கூட, கலீதா ஜியாவை சந்தித்து பேசியிருந்தார். கலீதா ஜியா தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தாரிக் ரஹ்மான் அடுத்த பிரமராகப் பொறுப்பேற்கும்பட்சத்தில், இரு நாட்டு உறவு சுமூகநிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















