ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி சங்கடமான சூழ்நிலையில் சிக்கியது இணையத்தில் வைரலாகி வருகிறது.. அது என்ன? என்பதை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்..
சர்வதேச பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடர்பாக ஜெர்மனியின் முனிச் நகரில் பாதுகாப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் ராணுவ சீருடையில் வந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தனது குழுக்களுடன் மாநாடு அறைக்குள் செல்ல முற்பட்டார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய காட்சி தான் இது…

அந்த வீடியோவில், நில்லுங்கள், எங்கே உங்களது அடையாள அட்டை, அதனை திருப்பிக் காட்டுங்கள் என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
பாகிஸ்தானில் எல்லாமே நான்தான் என்ற அகங்காரம் கொண்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு, பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் கேள்வி தர்மசங்கடமாக அமைந்துவிட்டது. இந்த வீடியோ காட்சி ஆன்லைனில் மின்னல் வேகத்தில் பரவவும் தொடங்கிவிட்டது. அசிம் முனீர் மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் போலன்றி, நிலையான பாதுகாப்பு நெறிமுறையின் ஒருபகுதியாக அடையாள சான்றுகளை வழங்க வேண்டியிருந்ததாக ஊடகங்கள் உறுதிப்படுத்தின.
இந்த வீடியோ காட்சிகளை பார்வையிடுவோர் சிலர், இது ஒரு இராஜதந்திர ரீதியிலான சங்கடமான சூழல் என்று வர்ணித்தாலும், மற்றவர்கள் சர்வதேச நிகழ்வுகளில் பாதுகாப்பு தொடர்பான சோதனைகள் வழக்கமான நடைமுறையே என்று முட்டு கொடுத்தனர்.
உலக அரங்கில் பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீரை யாருக்கும் தெரியாது என்று கூறியுள்ள பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி அடில் ராஜா, கேட் கீப்பர்களிடம் பணிவுடன் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் விமர்சித்திருக்கிறார்.
சுவாரஸ்யமாக, ஜெர்மனியை தளமாகக் கொண்ட சிந்து அரசியல் அமைப்பான ஜெய் சிந்து முத்தஹிதா மஹாஸ் (JSMM), அசிம் முனீர் பங்கேற்பதை எதிர்த்து, மாநாடு நடந்த இடத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அழைப்பு விடுத்ததற்காக அந்த அமைப்பு வருத்தமும் தெரிவித்திருந்தது.. பாகிஸ்தானின் ராணுவ அமைப்பு மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் தலையீட்டு முன்னிறுத்தும் ஒரு அமைப்பு என்றும் விமர்சித்தது.
1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் நடந்த நிகழ்வுகளை JSMM குறிப்பிட்டு, அது வங்கதேசம் உருவாக வழிவகுத்தது. அப்போதையை மோதலை இனப்படுகொலை என்றும் விவரித்தது. பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் இப்பகுதியில் தீவிரவாத சக்திகளை ஆதரிப்பதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டி வரும் நிலையில், பாகிஸ்தான் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துவருகிறது.
















