பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் வீசப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பஞ்சாப்பில் எல்லை தாண்டிய வான்வழி ஊடுருவல்களின் எண்ணிக்கை மற்றும் கடத்தப்படும் பொருட்களின் அளவு கடுமையாக அதிகரித்துள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) மற்றும் மாநிலக் காவல் துறையின் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
2021-ல் மூன்று சம்பவங்களில் வெறும் 10 கிலோ போதைப்பொருள் மட்டுமே கைப்பற்றப்பட்டது. 2022 ல் 35 சம்பவங்களில் 148 கிலோவும், 2023-ல் 28 சம்பவங்களில் 103 கிலோவும், 2024-ல் 179 சம்பவங்களில் 236 கிலோவும் கைப்பற்றப்பட்ட நிலையில் 2025-ல் 305 தனித்தனி சம்பவங்களில் ட்ரோன்கள் மூலம் கடத்தப்பட்ட 468 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது கிட்டத்தட்ட 50 மடங்கு அதிகமாகும்.
அதுவே இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் 7 நாட்களில் மட்டும் 516 கிலோ ஹெராயினைப் பஞ்சாப் காவல்துறை கைப்பற்றியுள்ளது. கூடுதலாக கையெறி குண்டு உட்பட 122 துப்பாக்கிகள் 909 தோட்டாக்கள் மற்றும் 139 ட்ரோன்களையும் பஞ்சாப் காவல்துறை கைப்பற்றியுள்ளது. சொல்லபோனால் இந்தியாவிற்குள் கடத்தப்படும் மொத்த ஹெராயினில் சுமார் 58 சதவீதம் பஞ்சாப் வழியாகவே கடத்தப்படுவதாக தரவுகள் காட்டுகின்றன.
குறிப்பாக போதைப் பொருள் மட்டுமின்றி சீனா, ஆஸ்திரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட உயர்தர சிறிய ரக ஆயுதங்களும் ட்ரோன்கள் மூலம் இந்தியாவுக்குள் வீசப் படுகின்றன.
எல்லை தாண்டிய கடத்தல் கும்பல்கள் உள்ளூர் எல்லைப் பகுதி மக்களைத் தங்கள் பக்கம் இழுத்து, அவர்களை ஆயுதங்களைக் கொண்டு செல்லும் நபர்களாகப் (couriers) பயன்படுத்துகின்றன. பஞ்சாபில் உள்ள குற்றக் கும்பல்களிடமும், ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களிடமும் இந்த ஆயுதங்களைக் கொண்டு சேர்ப்பதே இவர்களின் முக்கியப் பணியாக உள்ளது.
ட்ரோன்கள் மூலம் வீசப்படும் போதைப்பொருட்கள் பெரும்பாலும் இந்த நபர்களுக்கான ஊதியமாகவே வழங்கப்படுகின்றன என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் 9 ஆம் தேதி 52 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப்பிரிவுடன் இணைந்து ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா காவல்துறை நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஸ்ரீநகரிலிருந்து பாரமுல்லாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு வெள்ளை நிற மாருதி பிரெஸ்ஸா கார் தடுத்து நிறுத்தப் பட்டது.
அந்தக் காரில் , துருக்கியில் தயாரிக்கப்பட்ட CANIK TP9SF METE ரக அதிநவீன கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இது முதலில் பஞ்சாப்பில் ட்ரோன் மூலம் வீசப்பட்டு காஷ்மீருக்கு கடத்தப் பட்டிருக்கலாம் என்று உளவுத் துறை கூறுகிறது.
இப்படிக் கடத்தப்படும் ஆயுதங்கள் மூலமாகவே ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸில் உள்ள ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) தளங்களுக்கு அருகில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளதாக சந்தேகிக்கப் படுகிறது.
ஆரம்பத்தில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பூச்சிக்கொல்லி தெளிப்பதற்காக சீனாவில் தயாரிக்கப்பட்ட வணிக ரீதியான விவசாய ட்ரோன்களைப் பயன்படுத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இப்போது 10 கிலோ எடையைத் தாங்க கூடிய அதிநவீன குவாட்காப்டர்களைப் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கடத்த பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த அதிநவீன ட்ரோன்கள் தரையிறங்கும்போதோ இடைமறிக்கப்படும்போதோ, அவற்றின் உள்ள ஜிபிஎஸ் மற்றும் விமானத் தரவுப் பதிவுகளைத் தானாகவே அழிக்கும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.
எல்லை தாண்டிய கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், சாட்டிலைட் இணைய சேவையைப் பயன்படுத்துவதால் இது உள்ளூர் ரேடியோ அலைவரிசையில் கண்டுபிடிக்க முடியாமல் போவதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எல்லைதாண்டிய போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல்களை தடுக்கவும் டிஜிட்டல் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி மத்திய பாதுகாப்பு அமைப்புகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளன.
















