திருப்போரூர் அருகே நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது வைகோவிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்களை மதிமுகவினர் தாக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே கலவாக்கம் பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை உயர்நீதிமன்ற ஆணைப்படி அகற்றுவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார். அப்போது, வைகோவுக்கு மேளதாளங்கள் முழங்க மதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கேரளாவில் ஒரு கருவேல மரங்களை பார்க்க முடியாது என்றும், தமிழகத்தை மொத்தமாக அழித்து வரும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக திமுக கடுமையாக விமர்சித்து வருவதாகவும், குதிரை பேரத்தை ஆரம்பித்து வைத்ததே திமுக எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும், கடந்த திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரெப்ஷன் இருந்ததாகவும் விமர்சித்தார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், திமுக கூட்டணியில் இருந்துபோது ஏன் கேட்கவில்லை என வினவினார். இதனால், ஆத்திரமடைந்த வைகோ செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து, வைகோவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செய்தியாளரை மதிமுகவினர் தாக்க முயன்று விரட்டியடித்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
















