ஈரான் போரிலிருந்து வெளியேறுவதற்காக அந்நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ நடவடிக்கைகளுக்கான முழுத் தயார் நிலையில் இருந்தாலும், மிகப்பெரிய தாக்குதல் தேவையற்றதாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தொடங்கிய ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர நடத்தப் பட்ட நீண்ட கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஈரானும், அமெரிக்காவும் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது.
ஈரானுடன் இனி பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்று கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முழு அளவிலான ராணுவ நடவடிக்கைக்கும் ஈரான் துறைமுக முற்றுகைக்கும் உத்தரவிட்டார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் குண்டுவீச்சுத் தாக்குதல் தொடர்ந்து 13 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இராஜதந்திர பேச்சுவார்த்தை அல்லது இராணுவ நடவடிக்கை மூலமாகவோ ஈரான் போரில் இருந்து வெளியேறும் வழியை அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி அந்நாட்டைப் பகுதி பகுதியாக அழிக்க முடியும் என்றும், அதை இன்னும் விரைவாகவும் செய்ய முடியும் என்றும், அதே நேரம் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் கூறியுள்ள ட்ரம்ப், இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஒரு உடன்பாட்டை எட்டுவதில் ஈரான் அதிக தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது என்று கூறிய ட்ரம்ப் ஒரு வேளை பேச்சுவார்த்தைகள் தோல்வியடையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார். அதேநேரம் ஈரானுடனான எந்தவொரு உடன்பாடும், தெஹ்ரான் அணு ஆயுதம் பெறுவதை முழுமையாக தடை செய்யும் என்றும் உறுதிப்பட கூறியுள்ளார்.
ஈரானுக்கு எதிரான அதிபரின் இராணுவ நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையிலான ‘போர் அதிகாரத் தீர்மானத்தை’ அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை இரண்டாவது முறையாக நிறைவேற்றிய மறுநாளே அதிபர் ட்ரம்ப் இக்கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக ஈரான் மீது தினசரி கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்குவதாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
















