அனைத்து அதிகாரிகளும் நல்ல அறையில் இருக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் நல்ல உள்ளத்தால் தான் அறை மாற்றப்படுகிறது என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்துள்ளார்.
பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, கோவையில் ஈவெரா பெயரிலான நூலகத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்தும் திறக்கப்படாமல் உள்ளதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இன்னும் அண்ணா அறிவாலயத்தில் ஈவெரா சிலை நிறுவப்படவில்லை என கூறினார். ஆனால், தவெக கட்சி அலுவலகத்தில் கொள்கை தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எ.வ.வேலு, முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தின் பெயரை மாற்றி காமராஜர் பெயர் வைக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார். மேலும், முதலமைச்சர் என்று பொதுவான பெயரில் தான் காலை உணவுத் திட்டத்தின் பெயர் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் செங்கோட்டையன், மானிய கோரிக்கையை விட்டு விட்டு பள்ளிக்கல்வித்துறை பற்றி உறுப்பினர் பேசி வருவதாக சுட்டிக்காட்டினார்.
இதனை அடுத்து பேசிய எ.வ.வேலு, முதலமைச்சர் அவையில் பேசும்போது டெண்டர்களை முறைப்படுத்த தெரிந்த அளவிற்கு அதன் ரேட்டை உயர்த்தி ஊழல் செய்யத் தெரியாது என்று பேசியதை சுட்டிக்காட்டினார். மேலும், முதலமைச்சருக்கு செய்தி தவறாக கிடைத்திருக்கிறதா அல்லது அவரை தவறாக நடத்திவிட்டார்களா எனக் கேள்வி எழுப்பினார்.
உடனடியாக குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், முதலமைச்சர் எல்லாம் தெரிந்தவர் என்றும், அவரை யாரும் வழிநடத்த தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எ.வ.வேலு, தான் தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்த மாட்டேன் என்றும், தன்னுடைய கட்சி தலைவர்கள் தங்களை அப்படித்தான் வளர்த்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார். திமுக ஆட்சியில் தான் அரசு அலுவலர்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அப்போறு குறுக்கிட்ட அமைச்சர் ராஜ்மோகன், சட்டப்பேரவையில் உள்ள நாற்காலிகள், மேசைகள் உள்ளிட்ட அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் செய்யப்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார். பெயர் மாற்றம் தொடர்பாக பேசிய அமைச்சர், ஜெ.ஜெ.பிலிம் சிட்டியை எம்ஜிஆர் பிலிம் சிட்டியாக மாற்றியது கருணாநிதி என்றும், அம்மா மருந்தகங்கள் முதல்வர் மருந்தகங்களாக மாறியது எனவும் சுட்டிக்காட்டினார். ஆனால், தவெக ஆட்சியில் காமராஜர் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எ.வ.வேலு, முதலமைச்சரின் அறை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுப்படுவது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். அறை மாற்றப்படுவதற்கான டெண்டரில் முரண்பாடு உள்ளது என செய்தித்தாள்களில் வந்துள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும், முதலமைச்சரின் அறை மாற்றம் செய்யப்படுவதால் இடவசதியில்லாமல் அதிகாரிகள் ஆதங்கப்படுவதாக எ.வ.வேலு தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் புதிய தலைமைச் செயலகம் கட்ட ஏன் நினைத்தார்கள் என கேள்வி எழுப்பினார்.
காலை 9.30 மணி முதல் 5 மணி வரை அரசு ஊழியர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என பலரும் முதலமைச்சரை சந்திக்கின்றனர் என்றும், வெளிநாட்டு பிரதிநிதிகள் சந்திக்கும் இடம் மேம்படுத்தப்படவில்லை எனவும் கூறினார். முதலமைச்சரை சுற்றி 200 பேர் உள்ளனர் என சுட்டிக்காட்டிய அமைச்சர், அனைவரும் நல்ல அறையில் அமர வேண்டும் என்ற முதலமைச்சரின் நல்ல உள்ளத்தால் அறை மாற்றப்படுகிறது எனவும் விளக்கமளித்தார்.
















