தமிழகத்தில் எல்லா வளங்களும், இளைஞர் சக்தியும் இருந்தும், ஊழல் திமுக ஆட்சியால் தமிழகம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என பாஜக மாநில தலைவர் கு. அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆண்டுக்கு பத்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த ஊழல் திமுக அரசு, தற்போது வரை அது குறித்த எந்த முயற்சிகளும் எடுக்காமல் செயலற்றுப் போய் இருக்கிறது. துபாய், சிங்கப்பூர், ஜப்பான் என குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வந்த முதல்வர் மூவாயிரம் கோடி, ஐந்தாயிரம் கோடி என்று ஊடகங்களில் வாய்வார்த்தைகளில் கூறியதோடு தன் கடமை முடிந்து விட்டது என்று இருக்கிறார். துபாய் சுற்றுலா சென்று வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. அவர் சொன்ன 26,100 கோடி முதலீடு என்ன ஆனது என்று தெரியவில்லை.
கடந்த நிதி ஆண்டை விட, 2022 – 2023 நிதியாண்டில், தமிழகத்தில் நேரடி அன்னிய முதலீடு 27.7 சதவீதம் குறைந்திருக்கிறது என்ற செய்தியும் தற்போது வெளியாகியிருக்கிறது. தான், தன் மகன், தன் குடும்பம் என்ற ஒரே நோக்கத்தில் செயல்படும் ஊழல் திமுக அரசுக்கு, மாநிலத்தில் உள்ள இளைஞர்களைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லை.
புதிதாகத் தொழில் தொடங்க வருபவர்களிடம், 30 சதவீதம் கமிஷன் வசூலிக்க முயற்சிப்பதால், தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் முதலீடு செய்வதைத் தவிர்க்கின்றன என்று தெரிகிறது. சமீபத்தில், ஃபாக்ஸ்கான் நிறுவனம், தமிழகத்தில் கோடி முதலீடு ரூ1,600 செய்யவிருப்பதாகவும். இதன் மூலம் 6000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அவர் கூறிய சில மணி நேரத்திலேயே, ஃபாக்ஸ்கான் நிறுவனம், தமிழக அரசுடன் அப்படி எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்று மறுத்ததாகச் செய்திகள் வெளியாகின. உடனடியாக முதலமைச்சர் தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார். ஃபாக்ஸ்கான் நிறுவன முதலீடு என்ன ஆனது என்பதற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இன்றைய தினம், கர்நாடக மாநில அமைச்சர் ப்ரியங்க் கார்கே, ஃபாக்ஸ்கான் நிறுவனம், கர்நாடக மாநில அரசுடன் 600 மில்லியன் டாலர் (சுமார் ரூ4963 கோடி) முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம், 14,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் செய்யவிருப்பதாகச் சொன்ன முதலீடுதான் கர்நாடக மாநிலத்துக்குச் கைமாறியிருக்கிறதா? தமிழகத்தில் 21,600 கோடி முதலீடு என்று அறிவித்துவிட்டு, தற்போது கர்நாடக மாநிலத்தில் அதை விட மூன்று மடங்கு அதிகமாக முதலீடு செய்ய என்ன காரணம்?
தமிழகத்தில் முதலீடு செய்ய முற்பட்ட நிறுவனம், எதனால் தமிழகத்தை விட்டுவிட்டு இன்னொரு மாநிலத்தில் முதலீடு செய்கிறது என்பவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும். இதனால் தமிழக இளைஞர்கள் இழந்த வேலைவாய்ப்புகளுக்கு யார் பொறுப்பு?
எல்லா வளங்களும், இளைஞர் சக்தியும் இருந்தும், ஊழல் ஆட்சியால் தமிழகம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல், வருகின்ற முதலீடுகளையும் தவற விட்டு, வெறும் சாராய விற்பனையில் சாதித்தால் போதும் என்ற எண்ணத்தில் செயல்படும் திமுக அரசால், தமிழ் நாட்டுக்கோ அல்லது தமிழக மக்களுக்கோ எவ்வித பயனும் இல்லை. எத்தனை நாட்களுக்கு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும்? விரைவில் இளைஞர்கள் தமிழக அரசைக் கேள்வி கேட்கத் தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.