மக்களவைத் தேர்தலில் 340 முதல் 350 வரையிலான தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் நடந்த கருந்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “பெண்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி அமைப்பிலிருந்து, பெண் தலைமையைக் கொண்ட வளர்ச்சி முறைக்கு நாம் நகர்ந்திருக்கிறோம்.
நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால், கல்வியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடிந்தவற்றை செய்து வருகிறோம். விவசாயக் கழிவுகளை எரிக்காமல் எத்தனாலாக மாற்ற வேண்டும். எத்தனாலுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
அடுத்த தலைமுறை கார்கள் எத்தனால் மற்றும் மின்னணுவில்தான் இருக்கும். நமது சாலைகளில் 70 சதவீதம் இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன. நாம் மின்னணு வாகனங்களுக்கு மாறி வருகிறோம். பசுமை எரிபொருளை நோக்கி மாறுவதற்கான பணியை நாங்கள் விரைவு படுத்தி இருக்கிறோம்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவில்லை என்றால், பெட்ரோல் விலை லிட்டர் 250 ரூபாயாக அதிகரித்திருக்கும். உலக அளவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக கடந்த 2 ஆண்டுகளில் பெட்ரோல் விலை சரிந்தது இந்தியாவில் மட்டும்தான்.
2024 மக்களவைத் தேர்தலில் 340 முதல் 350 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மாநிலங்களவையில் எனது பதவிக் காலம் இன்னும் இருப்பதால், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசிக்கவில்லை” என்றார்.