மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம், பிஷ்ணுபூரில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததற்கு திரிணாமுல் காங்கிரசும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து செய்த சதி என குற்றம்சாட்டினார்.
மேற்குவங்கப் பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்துவிட்டதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மறைமுகமாக சாடினார். ஊடுருவல்காரர்களுக்குச் சாதகமாக செயல்படும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து சட்டங்களையும் மீறுகிறது என்றும், மதம் சார்ந்த அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதன் மூலம், அரசியலமைப்பின் அடிப்படை உணர்வுகளையே நசுக்கி வருகிறது எனவும் கூறினார்.
மேலும், மேற்குவங்கத்திற்கு வருகை தந்தபோது குடியரசுத் தலைவருக்கு நிகழ்ந்த அவமரியாதையை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, குடியரசுத் தலைவருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பை மேற்குவங்க சகோதரிகள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
















