2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்சென்று, வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறும் வகையில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் போலீசாரும், 300 கம்பெனி துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்கள் சிரமமின்றி வாக்களிக்க 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் சேர்த்து 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், முதல்முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் பொருத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகளை கண்காணிக்க 136 பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி வாக்குச்சாவடிகளுக்கு உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, மே 4 -ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















