மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், நாள்தோறும் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், திக்விஜயம் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றன.
இந்நிலையில், சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு மாசி வீதிகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலை 4 மணிக்கு சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.
இதனை தொடர்ந்து, வேதமந்திரங்கள் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க ரிஷப லக்கனத்தில் மீனாட்சியம்மனுக்கு வைரத்தால மங்கல நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் கோலகலமாக நடைபெற்றது.
















