கோடை வெயில் தாக்கம் காரணமாக டெல்லியின் சுற்றுவட்டார மாவட்டங்களில் பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
டெல்லியின் சுற்றுவட்டார பகுதிகளான உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத், நொய்டா பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளி நேரத்தை மாற்றி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அங்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுத்தது,இந்நிலையில் இப்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 42.8°C பதிவானது.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் பொருட்டு, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
புதிய நேரத்தின்படி, வகுப்புகள் காலை 7:30 மணிக்குத் தொடங்கி, மதியம் 12:30 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த விதிமுறை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ (CBSE), ஐசிஎஸ்இ (ICSE) உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என மாவட்ட கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
















