மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்ததாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 19ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த நிலையில், மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர்.
இந்நிலையில், 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் கட்டண சீட்டு வாங்கியிருந்தும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டினர். மேலும், முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை எனக் கூறியுள்ள பக்தர்கள், கோயில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















