ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப ரீதியில் உதவிய சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மீது கடந்தாண்டு இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தகா்த்தது.
நூறுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் மூண்டது. நான்கு நாள்கள் நீடித்த இந்த மோதல் பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொழில்நுட்ப ரீதியில் சீனா உதவியதை அந்நாட்டு அதிகாரி ஒருவா் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாம் ஏற்கெனவே அறிந்த விஷயத்தை உறுதிப்படுத்தும் தகவலாகவே பார்க்கப்படுகிறது என கூறியுள்ளது. மேலும், ஒரு பொறுப்புள்ள நாடாக சீனா சிந்தித்து செயல்பட வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
















