சனாதனம் குறித்து விமர்சிக்கும் உதயநிதிக்கு எதிராக பெரியளவில் போராட்டங்கள் வெடிக்காததற்கு காரணம் மதப்பற்று இல்லாதது அல்ல என்றும், தமிழக மக்களிடையே சனாதனம் சொல்லுக்கான விளக்கம் மாறுபட்டிருப்பதே காரணம் எனவும் ஜோகோ நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனாதனம் குறித்து தொடர்ந்து தாக்கி பேசும் உதயநிதிக்கு எதிராக தமிழ் இந்துக்களிடம் கொந்தளிப்பு ஏற்படாததற்கு மொழியே காரணம் என தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியில் “சனாதனம்” என்ற சொல் வழக்கமான பயன்பாட்டில் இல்லை என்றும்,
பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இச்சொல் பற்றித் தெரியாது எனவும் கூறியுள்ளார்.
“தர்மம்” என்ற சொல் தமிழில் மிகவும் பரவலாகப் புழக்கத்தில் உள்ளது என்றும்,
தமிழ்நாட்டில் ‘தர்மபுரி’ என்ற பெயரில் ஒரு மாவட்டமே உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மொழியின் பயன்பாட்டில் உள்ள “தர்மம்” என்ற சொல் இந்தியில் குறிக்கப்படும் “இந்து தர்மம்” என்பதையே நடைமுறையில் உணர்த்துகிறது எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழில் நடைமுறையில் உள்ள தர்மம் என்ற சொல்லை உதயநிதி தாக்கி பேசியிருந்தால் “அதர்மத்தை” போதிப்பதாகக் கூறி பரவலான விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பார் என தெரிவித்துள்ளார்.
தர்மம் என்ற சொல்லை தவிர்த்து சனாதனம் என்ற சொல்லை உதயநிதி தேர்ந்தெடுள்ளார் எனக்கூறியுள்ள அவர்,தமிழ் மக்களிடையே அச்சொல்லை உதயநிதி பிரபலப்படுத்தி வருகிறார் என சாடியுள்ளார்.
சனாதனம் குறித்து உதயநிதி தொடர்ந்து பேசுவதால் தமிழ்நாட்டில் வலுவாக இருந்த திமுகவுக்கு எதிரான அலை வீசியது என தெரிவித்துள்ள அவர், திமுகவால் இதுவரை எந்தத் தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்து தெய்வங்கள் மீது திமுக தொடர்ந்து தொடுத்து வந்த தாக்குதல்களின் மூலமாகவே, திமுக தோல்வியடைந்துள்ளதாகவும், சனாதனம் குறித்து பேசாததால் திமுகவுக்கு எதிரான அலையை அதிமுக சாதகமாக பயன்படுத்தி கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணம் செலவழித்தும், தவெகவை எதிர்த்து திமுகவால் வெற்றி பெறமுடியவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், சனாதனம் குறித்து உதயநிதி தொடர்ந்து பேசினால், திமுக கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராமலேயே போய்விடும் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
















