சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளை பயன்படுத்தியது தொடர்பாக, தவெக, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக திமுக, அதிமுக-வுக்கு எதிராகவும்,
பெற்றோரை தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி குழந்தைகளுக்கு அறிவுறுத்திய தவெக மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் வாசுகி என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தவெக தரப்பில், வெறும் செய்தியின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்,தேர்தல் முடிவுகள் அறிவுக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின் தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
திமுக, அதிமுக தரப்பில், குழந்தைகளை பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக தங்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும், பணப்பட்டுவாடா புகாரில் வெற்றிபெற்ற தவெக வேட்பாளரை எதிர்மனுதாரதாக சேர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது
தேர்தல் ஆணையம் தரப்பில், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி தவெக, திமுக, அதிமுக, தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கின் , விசாரணையை ஜூலை 1 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
















