முந்தைய ஆட்சியாளர்களுக்கு மாதந்தோறும் மதுபானங்கள் வழங்கும் ஆலைகள் வழங்கி வந்த கமிஷன் தொகையை வரியாக மாற்றி அரசு கஜானாவில் செலுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டாஸ்மாக் வாயிலாக 2025 – 26ல் ஆயத்தீர்வை வருவாயாக 11 ஆயிரத்து 836 கோடி ரூபாயும், மதிப்பு கூட்டு வரியாக 39 ஆயிரத்து 10 கோடி ரூபாயும் அரசுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே இருந்த 717 மதுக்கடைகள் மூடப்பட்டதாகவும், கடந்த ஆட்சி காலங்களில் மதுபான நிறுவனங்கள் வாயிலாக பெறப்படும் ஒரு குறிப்பிட்ட தொகை அரசு கணக்கில் வராமல், தனி நபர்களுக்கு சென்றதை பல்வேறு ஊடகங்கள் சுட்டிக்காட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விபரம் முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றதும், உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசு விதிகளில் திருத்தம் செய்து கடந்த 5ஆம் தேதி அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானம், பீர், ஒயின் வகை பெட்டி ஒன்றுக்கு உரிமத் தொகையுடன் கூடுதல் கட்டணமாக வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மது வகைக்கு 90 ரூபாய், பீர் வகைக்கு 40 ரூபாய், ஒயின் வகைக்கு 20 ரூபாய் வீதம் என மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக அரசுக்கு உடனடி வருவாயாக ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















