பயிர்க்கடன் விவகாரத்தில் தவெக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு, பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தாகவும் கூறினார்.
விவசாயிகளிடம் எதிர்ப்பு அதிகரித்ததை உணர்ந்த தவெக அரசு 75 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு முழு தள்ளுபடி எனவும், 75 ஆயிரத்திற்கு மேல் கடன்பெற்றவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே தள்ளுபடி என அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஏமாற்று செயல் என விமர்சனம் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி,ஒட்டகத்தை அதன் முதலாளி ஏமாற்றுவது போல தமிழக விவசாயிகளை முதலமைச்சர் ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் தவெக அரசு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் இபிஎஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
















