ஈரான்- அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் இனி ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்படும் என்றும் அதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் சீராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானிடமோ அல்லது அமெரிக்காவிடமோ இல்லாமல் உலக எண்ணெய் சந்தையின் விநியோகக் கட்டுப்பாடு சீனாவிடம் உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகத்தின் எண்ணெய் வர்த்தகக் கடல் பாதையில் ஐந்தாவது இடத்தில் ஹார்முஸ் ஜலசந்தி இருந்து வருகிறது. உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாக தான் நடந்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டதால் உலகளாவிய எண்ணெய் சந்தை கடும் பாதிப்புக்குள்ளானது.
110 நாட்களுக்குப் பிறகு ஈரான் அமெரிக்க நாடுகளுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சர்வதேச அளவில் மீண்டும் எண்ணெய் வர்த்தகம் சீராக நடப்பது சீனாவின் கையில் உள்ளது என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை உலகின் ‘ஸ்விங் உற்பத்தியாளர்’ என்று சவூதி அரேபியாவைத் தான் கூறிவந்த நிலையில் சீனாவே உலகின் முதல் “ஸ்விங் இறக்குமதியாளராக” மாறியுள்ளது.
நாட்டின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவான ஒரு நாளைக்கு 7.8 மில்லியன் பீப்பாய்களை சீனா இறக்குமதி செய்தது.
எண்ணெய்க் கப்பல்கள் மூலமான இறக்குமதியையும் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் ஆண்டின் சராசரி அளவை விட 45 சதவீதம் அதிகமாக சீனா குறைந்துள்ளது.
அதாவது சொந்தப் பொருளாதாரத்திற்குச் சேதம் ஏற்படாத வகையில் தனது எண்ணெய் கொள்முதலை வெகுவாக குறைத்து, உலகளாவிய எண்ணெய் விநியோக அதிர்ச்சியின் பெரும்பகுதியை சீனாவே தாங்கி கொண்டது.
ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளின் மொத்த எண்ணெய் நுகர்வுக்கு சமமான அளவில், சீனா தனது கடல்வழி எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துள்ளது.
ஒருகாலத்தில் குறுகிய மலாக்கா ஜலசந்தி வழியாக வரும் இறக்குமதிகளையே பெருமளவில் சார்ந்திருந்த சீனா அதற்கு மாற்றாக முன்னாள் அதிபர் ஹூ ஜின்டாவ் (Hu Jintao) கூறிய Malacca Dilemma என்ற அபாயத்தைச் சமாளிக்க, நடவடிக்கை எடுத்தது.
நீண்ட காலமாகவே எண்ணெய் இருப்புக்கள், மின்சார வாகனங்கள், புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரித்தல் என மாற்று திட்டங்களில் அதிகஅளவில் முதலீடுகளைச் செய்தது.
சீனாவின் எண்ணெய் இருப்பு சுமார் 1.4 பில்லியன் பீப்பாய்களாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இது அமெரிக்காவின் இருப்பை விட ஏறக்குறைய மூன்று மடங்கும், ஜப்பானின் இருப்பை விட ஆறு மடங்கும் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
ஈரான் போர் காலத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்,சீனாவின் நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களை charging செய்யும் பயன்பாடு கடந்த ஆண்டை விட 80 சதவீதம் அதிகரித்ததாகவும் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தியும் வியக்கத் தக்க வகையில் அதிகரித்ததாகவும் தரவுகள் காட்டுகின்றன.
இந்த உத்தியால் தான் சீனா, ஈரான் போரால் நாட்டின் பொருளாதாரம் பெரிதாக பாதிக்காமல் பார்த்துக் கொண்டு எண்ணெய் இறக்குமதியை வெகுவாகக் குறைத்துள்ளது. சீனாவின் இந்த எரிசக்தி உத்தியே உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு shock absorber செயல்பட்டு வருகிறது.
தனது எரிசக்தி தேவையில் 85 சதவீதத்துக்கும் மேல் இறக்குமதியையே நம்பி இருக்கும் இந்தியாவும் சீனாவின் எரிசக்தி உத்தியைப் பின்பற்ற வேண்டும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
















